ஒரு நிமிடத்தில் 80 முறை கரணம் அடித்த சிங்கப்பூர்ச் சிறுமி
ஒரு நிமிடத்தில் எத்தனை முறை கரணம் அடிக்கமுடியும்?
உலக அளவில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறார்
6 வயது ஆரியா பாட்டாச்சார்ஜி (Aaria Bhattacharjee).
சிங்கப்பூரைச் சேர்ந்த அந்தச் சிறுமி ஒரு கையை மட்டும் ஊன்றி ஒரு நிமிடத்தில் 80 கரணங்கள் அடித்தார்.
அவர் 4 வயதிலிருந்து 6 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் குழுவில் இருந்தார்.
அந்தக் குழுவில் ஆக அதிக முறை ஒற்றைக் கையை ஊன்றிக் கரணம் அடித்த சிறுமி ஆரியா.
அவர் மற்றொரு சாதனையையும் புரிந்தார்.
ஒரு நிமிடம் 15 வினாடிகளுக்கு சுவரை ஒட்டியவாறு தலைகீழாக நின்றார்.
அதுவே ஆக நீண்ட நேரம்.
ஆரியா சென்ற ஆண்டு இறுதியில் சாதனைகளைப் படைத்ததாக Kids World Records அமைப்பு அறிவித்தது. ஆனால் இப்போதுதான் அவை பரவலாகின.
சமூக ஊடகத்தில் பலர் ஆரியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
"காணொளியைக் கண்டாலே எனக்குத் தலை சுற்றுகிறது," என்று ஒருவர் பதிவிட்டார்.
"இளம் வயதிலேயே சிறுவர்களின் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுடைய வளர்ச்சிக்குப் பெற்றோர் துணையாக நிற்கவேண்டும்," என்று மற்றொருவர் குறிப்பிட்டார்.