வாழ்வியல் செய்தியில் மட்டும்
சுட்டெரிக்கும் சூரிய வெப்பம்! - சூட்டைத் தணிக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
சிங்கப்பூரில் இவ்வாண்டு மே தினத்தன்று பதிவான வெப்பநிலை கடந்த பல ஆண்டுகளின் மே தினங்களன்று பதிவான வெப்பநிலையைவிட அதிகமாக 36.7 டிகிரி செல்சியஸை எட்டியது.
வெப்ப அலையை எதிர்நோக்கவில்லை என்றாலும் பருவநிலை மாற்றம்; urban heat island effect எனும் நகர்ப்புற வெப்பமாதல் போன்றவற்றால் சிங்கப்பூர் சற்று வெப்பமான நாள்களை எதிர்நோக்குவதாகத் துணைப் பேராசிரியர் கோ தியே யோங் விளக்குகிறார்.
சூட்டைத் தணிக்க மக்கள் என்ன செய்கின்றனர் என்று கண்டறிய 'செய்தி' அதன் Instagram பக்கத்தில் கருத்தாய்வொன்றை நடத்தியது. அதில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
- கேட்கப்பட்ட கேள்வி:
வெப்பத்தைத் தணிக்க நீங்கள் அதிகம் செய்வது என்ன?
முடிவுகள்:
- தண்ணீரை அதிகமாகக் குடிப்பேன்: 77%
- வெளியே செல்வதைத் தவிர்ப்பேன்: 14%
- வெளியே இருந்தால் நிழலில் மட்டுமே இருப்பேன்: 5%
- வெளியே இருக்கும்போது Minifan என்ற சிறு மின்விசிறியைப் பயன்படுத்துவேன்: 4%
சூடான நாள்களில் உடல்வெப்பத்தைத் தணிக்க எவற்றை உட்கொள்ளலாம்?
(ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அஞ்சு சூட் வழங்கும் ஆலோசனை)
- இளநீர்
இளநீரில் நிறைய கனிமங்களும் (minerals) வைட்டமின் சத்துகளும் இருக்கின்றன.
- மாதுளை
மாதுளம் பழச்சாற்றைக் குடிப்பது உடலில் இருக்கும் வெப்பத்தைத் தணிக்கும். அதை எல்லா வயதினரும் உட்கொள்ளலாம்.
- புதினா இலைகள்
புதினா இலைகளை நீரில் ஊறவைத்துக் குடிக்கலாம். அதில் ஒருவிதக் குளிர்ச்சி கிடைக்கும்.
- பொதுவான காய்கறிகள், பழங்கள்
நாளின் முதற்பாதியில் நிறைய பழங்களையும் காய்கறிகளும் உட்கொள்ளலாம். அவற்றில் நார்ச்சத்து அதிகம் இருக்கும், மேலும் அவற்றில் உடலுக்குக் குளிர்ச்சி சேர்க்கும் தன்மை உள்ளது.
உடலில் சந்தனத்தைத் தடவும்படிப் பரிந்துரைக்கிறார் டாக்டர் அஞ்சு.
சந்தனத்தில் ஒருவிதக் குளிர்ச்சி தரும் தன்மை உள்ளது என்பதை அவர் சுட்டினார். தென்னிந்தியாவில் பலரும் சூட்டைத் தணிக்க, சந்தனப் பொடியைத் தண்ணீர் அல்லது பன்னீருடன் குழைத்து உடலில் தடவிக் குளிர்ச்சி அடைவது வழக்கம்.