சளிக்காய்ச்சல் பரவும் காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?
'ஹா..ச்...சூ!'
உங்களைச் சுற்றிலும் தும்மல் சத்தமா?
சளி, காய்ச்சல் என்று பலவகையான நோய்கள் பரவி வரும் காலக்கட்டத்தில் எப்படி உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்?
1. சுறுசுறுப்பாக இருத்தல்
உடற்பயிற்சி உடலின் ஆரோக்கியத்தையும் நோய்த் தடுப்பாற்றலையும் மேம்படுத்தும்.
உடற்பயிற்சி செய்யாதவர்களைவிட அதைச் செய்பவர்களிடையே நோய்வாய்ப்படும் அபாயம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
அன்றாடம் குறைந்தது 20 நிமிடங்களுக்கு மிதமான உடற்பயிற்சி செய்யும்போது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
2. போதிய அளவு ஓய்வெடுத்தல்
போதுமான அளவு தூக்கம் அல்லது தரமான தூக்கம் கிடைக்காதபோது உடலின் நோய் எதிர்ப்புத்திறன் குறைவதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
பெரியவர்களுக்குப் பொதுவாக ஒருநாளில் ஆறு முதல் எட்டு மணிநேரம் தூக்கம் தேவை. அது மனவுளைச்சலையும் குறைக்க உதவும்.
3. ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல்
பழங்கள், காய்கறி வகைகளில் உள்ள ஊட்டச்சத்து நோய்களை எதிர்க்க உதவும்.
தினந்தோறும் குறைந்தது 3 'servings' பழங்களைச் சாப்பிடும்போது சளிக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாகும் சாத்தியம் குறைவதாகக் கூறப்படுகிறது.
4. சுகாதாரத்தைக் கடைப்பிடித்தல்
சுகாதாரத்தையும் நல்ல பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பதால் எளிதில் நோய்வாய்ப்படுவதைத் தடுக்க முடியும்.
பொது உட்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும் அதைத் தொடர்ந்து போட்டுக்கொள்ளும்படி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முகக்கவசத்தை அணிவது பலவகையான கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.
COVID-19, காய்ச்சல் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் சளி, காய்ச்சல் பரவும் காலத்தில் நாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யமுடியும்....நோய் வரும் முன் காப்போம்!