வயது ஆக ஆகப் புதிய நண்பர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கின்றதா?
"உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்," எனப் பலர் சொல்லிக் கேட்டிருப்போம்.
இது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் கூட பொருந்தும்.
வயது கூடும்போது பொறுப்புகளும் கடமைகளும் கூடுகின்றன.
குடும்பம், வேலை ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தத் திண்டாடும்போது நண்பர்களைச் சந்திக்கவும், புது நண்பர்களைத் தேடவும் நேரம் கிடைப்பதில்லை.
அப்போது நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்களை எப்படி தக்கவைத்துக் கொள்வது?
மெக்சிகோவிற்குத் தனியாகப் பயணம் செய்து புது நண்பர்களைச் சந்தித்து மீண்டும் அமெரிக்காவிற்குத் திரும்பினார் உளவியலாளர் ஃப்ரென்கொ.
அவர் நட்பைப் பற்றி பெரிதும் ஆராய்ச்சி செய்பவர்.
புது நண்பர்களை எப்படித் தேடுவது? பழைய நண்பர்களுடன் இருக்கும் பிணைப்பை எப்படி வலுப்படுத்துவது?
சில குறிப்புகளை ஃப்ரென்கொ பகிர்ந்துகொண்டார்.
1. நண்பர்கள் முக்கியம் என்று நினைக்கவேண்டும். அப்போது, நட்பை வளர்க்க அதிக முயற்சி எடுப்போம்.
2. வாழ்க்கையில் உங்கள் நண்பர்கள் ஆற்றும் பங்கை அவர்களிடம் வெளிப்படையாகச் சொல்வது நல்லது.
காரணம் ஒருவர் முக்கியமானவராக நடத்தப்பட்டால் அவர் உங்களிடம் நெருக்கமாகப் பழகுவார்.
இது மனித இயல்பு.
3. சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் நேரடியாக நண்பர்களைச் சந்தித்துப் பேசுவது குறைந்துள்ளது. உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவழியுங்கள்.
4. உங்களுக்குத் தெரிந்த நபர்களின் நலனை விசாரியுங்கள். அவர்கள் மீது அக்கறை காட்டுங்கள்.
"நாம் பேசி பல நாள்கள் ஆகிவிட்டன. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்னும் குறுந்தகவல் ஒன்றை அனுப்பலாம்.
அவர்களும் உங்கள் மீது அக்கறை காட்டுவார்கள்.
நண்பர்களைத் தேட வயது ஒரு தடையே இல்லை.
மனத்தில் இருக்கும் தடைகளை அகற்றுங்கள், நல்ல நண்பர்களுடன் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள்.