ஒருவரின் செயலுக்கு அன்றே பலன்

Unsplash/Mulan Sukrisno
ஒருவர் செய்த நற்செயல் என்றாவது ஒருநாள் பலன் கொடுக்கும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு...
சீனாவில் ஒருவருக்கு அதே நாளில் பலன் கிடைத்தது.
குவாங்டோங் மாநிலத்தில் (Guangdong) பெண் ஒருவர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அருகே கார் விபத்து நேர்ந்திருப்பதைக் கண்டதாக Guangxi Daily சீன ஊடகம் சொன்னது.
ஆடவர் ஒருவர் காரில் சிக்கியிருந்ததை அவர் கவனித்தார்.
அவர் உடனடியாக நண்பரின் உதவியோடு ஆடவரைக் காரிலிருந்து மீட்க உதவினார்.
ஆடவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பெண்ணும் அவருடைய நண்பரும் பின்னர் ஓர் உணவகத்துக்குச் சென்றனர்.
அதன் உரிமையாளர் அவர்கள் வாங்கியதைவிட அதிகமான உணவுவகைகளைப் பரிமாறினார்.
அவற்றுக்குப் பணம் செலுத்தத் தேவையில்லை என்றும் உரிமையாளர் சொன்னார்.
உணவை ஏற்றுக்கொண்ட இருவரும் சற்றுமுன்னர் கண்ட கார் விபத்தைப் பற்றிப் பேசினர்.
உரிமையாளருக்கு அதிர்ச்சி.
தம்முடைய மகனும் சற்று முன்னர் விபத்தில் சிக்கியிருந்தார்.
வாடிக்கையாளர்கள் சொன்ன அதே இடத்தில்தான் மகனின் விபத்தும் நேர்ந்தது.
இருவரும் தம் மகனின் உயிரைக் காப்பாற்றியவர்கள் என்று கடையின் உரிமையாளர் உணர்ந்தார்.
அதை அறிந்த பெண்ணும் அவருடைய நண்பரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடையின் உரிமையாளர் நடந்ததை அறியாமலேயே தங்களுக்கு இலவசமாக உணவு வழங்கியதை அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
பெண் பின்னர் சமூக ஊடகத்தில் பதிவிட்ட கதை பரவலாகப் பகிரப்பட்டது.
'நல்லவர்களுக்கு நல்லது நடக்கும்' என்று இணையவாசிகள் பலர் கூறினர்.