இருமல் ஓயவில்லையா? என்ன செய்யலாம்?
(படம்: Envato Elements)
This audio is generated by an AI tool.
சளி சரியான பிறகும் இருமல் ஓயவில்லையா?
அது பிறருக்கும் பரவ வாய்ப்புள்ளதா?
என்ன காரணம்? மருத்துவர்களிடம் கேள்விகளை முன்வைத்தது மீடியாகார்ப் CNA ஊடகம்.
பெரும்பாலும் சளி, இருமல் ஆகியவை ஏற்படுவதற்குச் சில நாளுக்கு முன்பு ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு அவை பரவ அதிக வாய்ப்புள்ளது என்கிறார் பின்னக்கல் (Pinnacle) குடும்ப மருந்தகத்தின் நிறுவனர் டாக்டர் மொக் புன் ருய் (Mok Boon Rui).
அதேபோல சளி, இருமல் ஏற்பட்ட மூன்றாவது நாள் முதல் ஏழாம் நாள் வரை பிறருக்கு அவை பரவக்கூடும் என்றார்.
உடல் நலம் சரியாகிவிட்டபோதும் மூச்சுக் குழாய் முற்றிலும் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை இருமல் தொடர்வது இயல்பு என்று அவர் கூறினார்.
சிலருக்கு 4 முதல் 8 வாரங்கள் வரை அவ்வாறு இருமல் நீடிக்கலாம் எனச் சொல்கிறார் ஜூரோங் பலதுறை மருந்தகத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஜொயேன் கோர் (Joanne Khor).
மூச்சுக் குழாயில் ஏற்படும் எரிச்சல் அல்லது மூக்கிலிருந்து சளி தொண்டைக்குள் செல்வது ஆகியவற்றால் இருமல் ஏற்படுவதாக அவர் விளக்கினார்.
-தொடர் இருமல் இருக்கும்போது வேலைக்கு அல்லது பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டுமா?
"அவசியம் இல்லை. உடல் நிலை சரியாகும் அறிகுறி இருக்கும்போது வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் வழக்கம்போல ஈடுபடலாம்," என்கிறார் டாக்டர் மொக்.
இருமல் வரும்போது டிஷுத் தாள் அல்லது முழங்கையை வைத்து வாயை மூடிக்கொள்வது முக்கியம் என்றார் அவர்.
கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல், காற்றோட்டமான சூழலில் வேலை செய்தல், முகக்கவசம் அணிதல் ஆகியவையும் நல்ல பழக்கங்கள் என்று அவர் அறிவுறுத்தினார்.
குறிப்பாக முகக்கவசம் அணிவது நாம் சுவாசிக்கும் காற்றை மேலும் வெதுவெதுப்பாக்கி அதன் ஈரத்தன்மையை அதிகரிக்கிறது. அதனால் இருமல் குறையலாம் என்றார்.
-யாருக்குத் தொடர் இருமல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது?
ஆஸ்துமா, மூக்கின் உட்பகுதியில் வீக்கம் (allergic rhinitis), GERD எனப்படும் தொண்டைக் குழாய் எரிச்சல் நோய் ஆகியவை உள்ளவர்களுக்கும் புகை பிடிப்பவர்களுக்கும் தொடர் இருமல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றார் டாக்டர் கோர்.
-மருத்துவரை எப்போது காணவேண்டும்?
மூச்சுத் திணறல், சத்தமாகச் சுவாசித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, உடல் எடை இழப்பு, தூங்கும்போது வியர்வை, இருமல் சரியாவதுபோல் இருந்து பிறகு மோசமடைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை நாட வேண்டும் என்று அறிவுறுத்தினார் டாக்டர் கோர்.