வெந்நீர்ச் சாதனங்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது?
இந்தக் 'குளுகுளு' வானிலையில் பலரும் குளிப்பதற்கு வெந்நீர்ச் சாதனங்களை அதிகம் பயன்படுத்தலாம்.
ஆனால் வெந்நீர்ச் சாதனங்கள் வெடிக்கும், தீப்பற்றிக்கொள்ளும் சம்பவங்கள் நடந்துள்ளன.
அவற்றிலிருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பும் நேர்ந்திருக்கிறது.
இந்நிலையில் வெந்நீர்ச் சாதனங்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது?
இதோ சில வழிகள்...
1. பாதுகாப்புக் குறியீடு (safety mark)
வெந்நீர்ச் சாதனங்களில் இரு வகை உண்டு.
தண்ணீரை உடனே சூடாக்கும் சாதனம் ஒன்று. இதுவே பெரும்பாலான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் பொருத்தப்படுவது.
மற்றொன்று storage வெந்நீர்ச் சாதனம். இது அதிக அழுத்தத்தில் சூடான நீரின் நிலையான ஓட்டத்தை உறுதி செய்யக்கூடியது. அதிக இடத்தை எடுத்துக்கொள்ளக்கூடியது.
எந்த வகைச் சாதனமாக இருந்தாலும், அதில் பாதுகாப்புக் குறியீடு இருப்பது அவசியம்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு விற்கப்படும் அனைத்து வெந்நீர்ச் சாதனங்களிலும் பாதுகாப்புக் குறியீடு இருக்க வேண்டும்.
அது இல்லாத சாதனங்கள் பொருத்தப்பட அனுமதி இல்லை.
2. மின்தடைச் சாதனத்தைச் சோதனை செய்யவும்
1985ஆம் ஆண்டிலிருந்து அனைத்துப் புதிய வீடுகளிலும் மின்தடைச் சாதனம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
மின்கசிவு ஏற்படும்போது அது மின்சார விநியோகத்தைத் துண்டித்துவிடும்.
அது சரியாக வேலை செய்கின்றதா... வெந்நீர்ச் சாதனம் அதனுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதா...
இவற்றைச் சோதித்துப் பார்ப்பது அவசியம்.
3. உரிமம் பெற்ற மின்னியல் தொழில்நுட்பர் (electrician) தண்ணீர்க் குழாய்களைப் பொருத்துபவர்/பழுதுபார்ப்பவர் (plumber)
உரிமம் பெற்ற தொழில்நுட்பர்களே மின்சாரம் தொடர்பான வேலைகளைச் செய்ய வேண்டும்.
அதே போன்று தண்ணீர்க் குழாய்கள் தொடர்பான வேலைகளை உரிமம் பெற்றவர்களே செய்ய வேண்டும்.
சிங்கப்பூரில் அந்த உரிமங்கள் கடுமையான சோதனைக்குப் பிறகே வழங்கப்படுகின்றன.
அதனால் சிங்கப்பூரின் தரநிலைகளை அவர்கள் நன்கு அறிந்திருக்கக்கூடும்.
4. மும்முனைச் செருகி (3-pin plug)
தண்ணீரை உடனே சூடாக்கும் வெந்நீர்ச் சாதனங்களில் வழக்கமான மும்முனைச் செருகி மூலம்தான் மின்கசிவு ஏற்படுகிறது.
அவை 13 amperes மின்சாரத்தைத் தாங்கக்கூடியது.
ஆனால் பெரும்பாலான வெந்நீர்ச் சாதனங்கள் 14 முதல் 20 amperes மின்சாரத்தை இழுக்கக்கூடியவை.
சாதனம் அளவுக்கு அதிகமாகச் சூடாகி, நிலக்கம்பி மின்னோட்டக் கம்பியுடன் உருகினால், அது ஆபத்தாகக்கூடும்.
உடல் ஈரமாக இருந்தால், மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புக்கூட ஏற்படலாம்.
ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு வெந்நீர்ச் சாதனங்கள் அளவுக்கு அதிகமாகச் சூடாகும் நிலை ஏற்படலாம்.
இரு முனைச் செருகிப் பயன்படுத்துவது அதிகப் பாதுகாப்பு அளிக்கக்கூடியது.
அவை 20 amperes மின்சாரம் வரை தாங்கக்கூடியவை.
5. அடிக்கடி சாதனத்தைச் சரிபார்த்தல்
தினமும் வெந்நீர்ச் சாதனத்தைச் செயல்படுத்தி 10 நிமிடங்களுக்குப் பிறகு பயன்படுத்துவது சிறந்தது.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதை உரிமம் பெற்ற ஒருவரைக் கொண்டு சரிபார்க்கலாம்.
பிளாஸ்டிக் எரிவதுபோல் வாடை வந்தால், கம்பி அதிகமாகச் சூடாவதாக அர்த்தம். அதனால் கவனமாக இருப்பது நல்லது.