கணவரின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த அவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெண்

(படம்: Instagram/ king_maker_tattoo_studio)
தங்களின் அன்புக்குரியவர்களின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தப் பலரும் பலவற்றைச் செய்வதுண்டு.
பரிசுகள்... ஆடம்பரச் செயல்கள்... ஆகிய வழிகளில் பலரும் அன்பை வெளிப்படுத்துவதுண்டு.
அதுவும் அந்தச் செயலை அன்புக்குரியவர் எதிர்பார்க்கவில்லை என்றால் அதைச் செய்வதில் கிடைக்கும் ஆனந்தமே தனி.
இந்தியாவின் பெங்களூரு நகரில் ஒரு பெண் தமது கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்தும் காணொளி இணையத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.
காணொளியைப் பெங்களூரில் உள்ள King Maker பச்சை குத்தும் கடை Instagram பக்கத்தில் பதிவு செய்தது.
அதில் "சதீஷ்" எனும் பெயரை ஒரு பெண்ணின் நெற்றில் ஒட்டுகிறார் பச்சை குத்தும் கலைஞர்.
பின், அதைப் பச்சை குத்த ஆரம்பிக்கிறார் அவர்.
முதலில் மகிழ்ச்சியாகக் காணப்படும் பெண், பச்சை குத்த ஆரம்பித்தபின் வலியில் இருப்பதுபோல் காணப்பட்டு, பச்சை குத்தும் கலைஞரைச் செய்கை மூலம் நிறுத்த முயற்சி செய்வது போல் தெரிகிறது.
அந்தக் காணொளி 12.5 மில்லியனுக்கும் அதிகமான முறை காணப்பட்டு, 260,000க்கும் அதிகமான விருப்பக்குறிகளைப் பெற்றுள்ளது.
இணையவாசிகள் பலர் காணொளியைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் செயல் வேடிக்கையானது என்று பலர் கூறினர்.
அன்பு என்பது ஒருவரை நடத்தும் முறையில் உள்ளது, ஆடம்பரச் செயல்களில் அல்ல என்று சிலர் கூறினர்.