தகிக்கும் வெப்பம் - 14 ஹஜ் யாத்திரீகர்கள் மரணம்
(படம்: AFP)
சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின்போது வெப்பம் தாங்காமல் 14 ஜோர்தானிய யாத்திரீகர்கள் மாண்டனர்.
மேலும் 17 பேரைக் காணவில்லை என்று ஜோர்தானிய வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது.
அந்தத் தகவலை BBC செய்தி வெளியிட்டது.
காணாமல் போனவர்கள் தேடப்படுகின்றனர்.
மாண்டவர்களின் உடல்களை அடக்கம் செய்வது அல்லது சொந்த ஊருக்கு அனுப்புவது உள்ளிட்ட விவகாரங்களைச் சவுதி அதிகாரிகளுடன் பேசி வருவதாக அமைச்சு கூறியது.
மாண்டவர்களின் குடும்பத்தாரின் கோரிக்கைக்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதற்கிடையே 5 ஈரானிய யாத்திரீகர்களும் மாண்டனர்.
ஆனால் அவர்களின் மரணத்துக்கு என்ன காரணம் என்பதை ஈரானியச் செம்பிறைச் சங்கம் உறுதிப்படுத்தவில்லை என்று AFP செய்தி கூறியது.
ஹஜ் யாத்திரை உலகின் மிகப்பெரிய ஒன்றுகூடல் நிகழ்ச்சி.
1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த ஆண்டு அதில் பங்கேற்பதாகச் சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் அளவுக்கதிகமான வெப்பம் மிக முக்கியச் சவாலாக இருந்துவருகிறது.
இந்த வாரம் வெப்பநிலை 46 டிகிரி செல்ஸியஸைத் தாண்டியது.
மக்காவிலும் மதினாவிலும் வழக்கமாகப் பதிவாகும் வெப்பநிலையைக் காட்டிலும் இந்த முறை அது சராசரியாக 1.5இல் இருந்து 2 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று முன்னுரைக்கப்பட்டது.