உக்ரேனில் அணுவாயுதத்தைப் பயன்படுத்தினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: அமெரிக்கா
உக்ரேனில் அணுவாயுதத்தைப் பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா ரஷ்யாவை எச்சரித்திருக்கிறது.
அப்படியொரு சம்பவம் நடந்தால் அமெரிக்கா உடனடியாகப் பதில் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் (Jake Sullivan) கூறினார்.
உக்ரேனில் ரஷ்யப் படை பின்னடைவைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது.
அதனை ஒட்டி கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அணுவாயுதத் தாக்குதலுக்கான சாத்தியத்தைக் கோடி காட்டியிருந்தார்.
உக்ரேனில் ரஷ்யாவசம் உள்ள இடங்களை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, அந்த வட்டாரத்தில் ரஷ்யா பொதுவாக்கெடுப்பு நடத்துகிறது.
அது கைகூடினால், இன்னும் சில நாள்களில் அவை ரஷ்யப் பகுதிகளாகப் பிரகடனம் செய்யப்படலாம்.
அந்த வட்டாரங்களைத் தற்காக்க எந்த அளவுக்கும் செல்லத் தயார் என்று ரஷ்யா சென்ற வாரம் எச்சரித்தது.
இருப்பினும் அணுவாயுதத் தாக்குதல் குறித்து ரஷ்யா நேரடி எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை.