கழுத்தில் மலைப்பாம்புடன் அலையாடிய ஆடவருக்கு அபராதம்

(கோப்புப் படம்: RODGER BOSCH / AFP)
ஆஸ்திரேலியாவில் மலைப்பாம்புடன் அலையாடிய ஆடவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் கோல்ட் கோஸ்ட் (Gold Coast) வட்டாரத்திலுள்ள கடற்கரைக்குத் தாம் செல்லப்பிராணியாக வளர்க்கும் மலைப்பாம்பைக் கொண்டு சென்றார்.
அதைக் கழுத்தில் சுற்றிக்கொண்டு அலையாடினார்.
பாம்பைச் செல்லப்பிராணியாக வளர்ப்பதில் தவறில்லை... அதை வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்றது தவறு என்று அதிகாரிகள் கூறினர்.
அதற்குச் சிறப்பு அனுமதி பெறவேண்டும்.
மலைப்பாம்புக்குக் கடல் உகந்த இடம் அல்ல; விலங்குகளில் ஊர்வன, நீந்தக் கூடியவை என்றாலும் அவை பொதுவாக தண்ணீரை விரும்புவதில்லை; கடல் நாகங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு என்று அதிகாரிகள் ஆடவரைச் சாடினர்.
பொதுவாக 3 மீட்டர் வரை வளரக் கூடிய மலைப்பாம்புகள் நச்சுத் தன்மை கொண்டவை அல்ல. அவை பெரும்பாலும் பறவைகள், பல்லிகள் போன்றவற்றை இறுக்கித் திணறவைத்து விழுங்கும்.
-AFP