சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு மேலும் அதிகமான நாடுகள் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடுகளின் பட்டியல் அதிகரித்துவருகிறது.
ஆக அண்மையில் ஆஸ்திரேலியாவும் பிலிப்பீன்ஸும் அதில் இணைந்துகொண்டுள்ளன.
வரும் வியாழக்கிழமையிலிருந்து (5 ஜனவரி) சீனப் பயணிகள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் முன்னர், கிருமித்தொற்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.
பிலிப்பீன்ஸ், சீனாவிலிருந்து வரும் பயணிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
அவர்களிடம் ஏதாவது சுவாசப் பிரச்சினைகளோ அதற்கான அறிகுறிகளோ உள்ளனவா என்பது கண்காணிக்கப்படும்.
சீனாவின் கிருமித்தொற்று நிலவரம் பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள், அடுத்த வாரம் கூட்டு அறிவிப்பை வெளியிடுவது குறித்துக் கலந்துரையாடவிருக்கின்றன.
இதற்கிடையே, சீனாவின் வூஹான் நகரில் நோய்ப்பரவலுக்கு முந்திய ஆண்டுகளைப் போல, பல்லாயிரம் பேர் ஒன்றுதிரண்டு, புதிய ஆண்டை வரவேற்றனர்.
நள்ளிரவில் ஆகாயத்தில் பலூன்களைப் பறக்கவிட்டு மக்கள் கொண்டாடினர்.
அங்கு கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலோர் முகக்கவசங்களை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
COVID-19 நோய்த்தொற்று முதலில் அடையாளம் காணப்பட்ட இடம் வூஹான் என்று சொல்லப்படுகிறது.