Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் exclusive

அமெரிக்காவிலும் கனடாவிலும் அரிசி வாங்க அலைமோதும் மக்கள்: என்னதான் நடக்கிறது?

வாசிப்புநேரம் -
அமெரிக்காவிலும் கனடாவிலும் அரிசி மூட்டைகளை வாங்க இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

சென்ற வியாழக்கிழமையன்று (ஜூலை 20) பாசுமதி அல்லாத பிற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்தது.

இந்தியாவில் தாமதமாகப் பெய்த பருவமழையால்
பயிர்கள் கணிசமாகச் சேதமுற்றன.

உள்நாட்டில் ஒரே மாதத்தில் அரிசி சில்லறை விற்பனை விலை 3 விழுக்காடு உயர்ந்தது. இதன் எதிரொலியாகவே இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது என்று இந்திய அரசாங்கம் சொல்கிறது.

உலக அளவில் 300 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அரிசி முக்கிய உணவு.

அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40% ஆகும்.

"இந்தியச் சந்தையில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் உள்நாட்டுச் சந்தையில் விலை உயர்வைக் குறைக்கவும் இந்திய அரசாங்கம் ஏற்றுமதிக் கொள்கையில் திருத்தம் செய்துள்ளது," என்று உணவு அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக உணவுச் சந்தையில் குறிப்பாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகளில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பல்பொருள் அங்காடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Related article image
படம்: ஐஸ்வர்யா
இது குறித்து எமது ‘செய்தி’ நிருபர் ஐஸ்வர்யாவிடம் பேசிய அமெரிக்காவின் சாண்டியாகோவில் வசிக்கும் அரசு சஞ்சீவி என்பவர்,

“இது பற்றி முதலில் வாட்சாப் (WhatsApp) குழுக்களில் செய்தி பரவி வருவதாக எனது மனைவி கூறியதும் அது நிச்சயம் போலிச் செய்தியாக இருக்கும் என்றேன்”

என்று கூறினார்.

இது குறித்து மேலும் பேசிய அரசு சஞ்சீவி,

“தினசரி உணவில் அரிசியைத் தவிர்க்கமுடியாது என்பதால் என் மனைவி 21ஆம் தேதி மாலை பல கடைகளுக்குச் சென்று சில மாதங்களுக்குத் தேவையான அரிசி மூட்டைகளை வாங்கி வந்தார். ஒருவருக்கு இரண்டு அரிசி மூட்டைகள் வரை மட்டுமே வாங்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அரிசி மூட்டைகளை வாங்கக் குவிந்தவர்களில் தமிழ், தெலுங்கு மக்களே அதிகம். தமிழர்களுக்கு இட்லி அரிசியும் தெலுங்கு மக்களுக்கு சோனா மசூரி அரிசியும் மிகவும் முக்கியம். அரிசி வெறும் உணவு மட்டுமல்ல, நம் உணர்வோடு கலந்த ஒன்று,”

என்று கூறினார்.

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் அரிசித் தட்டுப்பாடு குறித்த அச்சம் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது.
Related article image
படம்: ஐஸ்வர்யா
இது குறித்து கனடாவின் டொரொண்டோ நகரில் வசிக்கும் வருண்குமார் இன்பராஜ் கூறுகையில்,

“இந்திய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு குறித்து இணையத்தில் வெளியான செய்திகளையும் காணொளிகளையும் பார்த்தேன். எனது வீட்டருகே உள்ள தமிழ்க் கடையில் சென்று பார்த்தபோது நான் வழக்கமாக வாங்கும் அரிசி வகைகளின் விலை சுமார் 5 டாலர் வரை உயர்ந்திருந்தது. குறிப்பாக சோனா மாசூரி, புழுங்கல் அரிசி ஆகியவற்றின் இருப்பு குறைவாகக் காணப்பட்டது. டொரொண்டோவில் ஒருவர் 60 அரிசி மூட்டைகள் வரை வாங்கிச் சென்றதாகக் கேள்விப்பட்டேன். இந்த அளவிற்கு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என நினைக்கிறேன்”

என்றார்.

இந்த நிலையில், அரிசியின் தட்டுப்பாட்டைக் கட்டுக்குள்
கொண்டுவர அரசாங்கங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
Related article image
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்