COVID-19 எவ்வாறு தொடங்கியது? 'பதில் சீனாவின் கையில் உள்ளது'
COVID-19 எவ்வாறு தொடங்கியது என்பதை விசாரிக்கச் சீனாவிடம் உள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு உலகச் சுகாதார நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.
COVID-19 தொடர்பான அனைத்து அனுமானங்களும் தற்போது நிலுவையில் உள்ளன.
பெய்ச்சிங்கிடம் உள்ள விவரங்கள் உலகச் சுகாதார நிறுவனத்திடம் பகிர்ந்துகொள்ளப்படும்வரை அந்த நிலை தொடரும் என்று தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்தார்.
சீனாவிடம் உள்ள அனைத்துத் தகவலையும் பார்க்கும்வரை எதையும் உறுதியாகச் சொல்லமுடியாது என்று அவர் தெரிவித்தார்.
சீனாவின் ஒத்துழைப்பை நாடுவதாகக் குறிப்பிட்ட அவர் அண்மையில் சீன அறிவியலாளர்கள் கொடுத்த தகவல்களின்மூலம் எந்தத் தெளிவான விடையும் கிடைக்கவில்லை என்று சொன்னார்.
COVID-19 விலங்குகளிடமிருந்து மனிதருக்குப் பரவியிருக்கலாம் என ஆதாரங்கள் காட்டுகின்றன.
மூவாண்டுகளுக்குமுன் வூஹானில் உள்ள விலங்குச் சந்தையில் கிடைத்த மாதிரிகளைக் கொண்டு அவ்வாறு சொல்லப்படுகிறது.
ஆனால் அந்தத் தகவல்கள் முன்கூட்டியே பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.
COVID-19 தொடர்பான அவசரநிலை இவ்வாண்டு தளர்த்தப்படும் என்று திரு. கேப்ரியேசஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் அது எப்போது நடக்கும் என்பதற்கான விவரங்களை அவர் வெளியிடவில்லை.