உலகம் trending
வறுமையை வென்ற வைராக்கியம்: இணையத்தைக் கலக்கும் சீனத் தாய்
This audio is generated by an AI tool.
கையில் வெறும் 700 யுவான் (சுமார் 130 சிங்கப்பூர் வெள்ளி)...
குழந்தையின் மீது தீராத அன்பு...
இவை மட்டுமே சீனாவைச் சேர்ந்த டோங் நா (Dong Na) என்ற இளம்பெண்ணிடம் இருந்த மூலதனம்.
இன்று அவர் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் ஆடை நிறுவனத்தின் உரிமையாளர்.
சீனாவின் ஹெனான் (Henan) மாநிலத்தைச் சேர்ந்த டோங் நா 2012இல் ஒற்றைப் பெற்றோரானார்.
அப்போது அவருக்கு வயது சுமார் 20 என்று South China Morning Post நாளேடு தெரிவித்தது.
கையில் சேமிப்பு இல்லை, நிலையான வருமானம் இல்லை.
குழந்தைக்குப் பால் மாவு வாங்கக்கூட உறவினர்களிடம் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
"நான் ஏழையாக இருக்கலாம், என் குழந்தை ஏழையாக இருக்கக்கூடாது" - இதுவே அவரைத் தூக்கமில்லா இரவுகளில் உழைக்க வைத்த மந்திரம்.
ஓரளவு முதலீடு தேவைப்படும் என்பதால் இரவுச் சந்தைகளில் துணிமணிகளை விற்கத் தொடங்கினார்.
அதிகாலை 5 மணிக்கு எழுந்து சைக்கிளில் சென்று பொருள்களை வாங்குவது, நள்ளிரவுவரை கடையில் துணி விற்பனை செய்வது எனக் கடினமாக உழைத்தார்.
ஒரு நாளைக்கு 3-4 மணிநேரம் மட்டுமே உறங்கினார்.
நள்ளிரவில் குழந்தை தள்ளுவண்டியில் உறங்க, கடையை மூட்டைகட்டித் தள்ளிக்கொண்டு அமைதியான வீதிகளில் அவர் நடந்த நாள்களே அதிகம்.
அவரது விடாமுயற்சிக்கு வெற்றி கிடைத்தது.
பாரம்பரிய சீனக் கலைகளையும் நவீன வடிவமைப்பையும் இணைத்து அவர் உருவாக்கிய ஆடைகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இன்று சீனாவெங்கும் பல நகரங்களில் கிளைகள் உள்ளன.
தற்போதைய வருமானம்: ஆண்டுக்கு 10 மில்லியன் யுவானுக்கும் (1.8 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மேல்.
அடுத்த இலக்கு: இந்த ஆண்டு 100 மில்லியன் யுவான்!