உலகம் செய்தியில் மட்டும்
தெற்காசியாவில் வெப்ப அலை - காரணம் என்ன?
விளக்கவுரை: முனைவர் நா வெங்கட்
2022 வசந்த காலத்தின் துவக்கத்தில் இருந்து, அதாவது மார்ச் மாதத்தில் இருந்து, ஆசியாவில் வறண்ட வெப்பநிலை நிலவுகிறது.
கொளுத்தும் வெயிலால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) மார்ச் மாதத்தில் வெப்பநிலை கிட்டத்தட்ட 125 ஆண்டுகளில் ஆக அதிகமாகப் பதிவாகியிருப்பதாய்க் கூறியிருக்கிறது. மழைப்பொழிவு இயல்பைவிடக் கால் பங்கு அல்லது மூன்றில் ஒரு பங்குவரை மட்டுமே இருந்தது என்றும் அது கூறியது.
வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கருதுவதால், தீ விபத்துகள், மின் தடைகள், சுகாதாரப் பிரச்சினைகள் ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் மிக அதிக ஏப்ரல் வெப்பநிலை 48.3 செல்சியஸ்.
அது 1958 இல் வடமேற்கு இந்தியாவில் உள்ள பார்மர் (Barmer) எனும் ஊரில் பதிவானது. பாகிஸ்தானின் நவாப்ஷா எனும் ஊரில், 4 ஆண்டுகளுக்கு முன்பு 50.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
இவை இதுவரை காணப்படாத அதிகபட்ச வெப்பநிலையாக இருக்கலாம். ஆனால் இனி வரும் காலங்களில் இவை முறியடிக்கப்படலாம்.
காரணங்கள்
- இயற்கையான காலநிலை மாறுபாடும் மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றமும் இந்நிலைக்கு மூல காரணம் என்கின்றனர்.
- Urban heat island effect அதாவது சிமெண்ட், நடைபாதை மேற்பரப்புகள் சூரியன் மறைந்த பிறகும் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்வதால் ஏற்படுவது.
- வெப்பமான நாள்களில், இரவு நேர வெப்பம், குளிர்ச்சி உடலுக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது, அது வெப்ப அழுத்தத்தை அதிகரிக்கிறது; எதிர்மறையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
- மார்ச் 2022 இல் தெற்காசியா முழுவதும் மழை சராசரியைவிட 71 விழுக்காடு குறைவாகப் பெய்தது.
- இந்தியாவிலும் சீனாவிலும் Greenhouse வாயுக்களின் உமிழ்வு விகிதங்கள் தொடர்ந்து அதிகரிக்கிறது. பொருளாதாரரீதியாக வளர்ச்சி அடையும் நாடுகளாக இருப்பது அதற்கு முக்கிய காரணம்.
- வளர்ச்சிக்காக காடுகளை அழிப்பது வெப்பநிலை அதிகரிக்க ஒரு முக்கியக் காரணமாகிறது
என்ன செய்யலாம்?
இதற்குமுன் பலமுறை, இவ்வாறான சூழ்நிலையை அவசரகாலமாக அரசாங்கங்கள் அறிவித்திருக்கின்றன. சூழ்நிலையைச் சமாளிக்க....
- வெளிப்புறப் பணியாளர்களுக்கான வேலை நேரத்தை மாற்றியமைக்கலாம்.
- குடிநீர் விநியோக இயந்திரம் அமைக்கலாம்.
- டேங்கர்கள் மூலம் தண்ணீர் வழங்கலாம்.
- சிறப்புத் தங்குமிடங்கள் அமைத்து, சுகாதார வசதிகளை அதிகரிக்கலாம்.
- காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கலாம்.
கத்திரி வெயில் தொடங்கிவிட்டதால், பொதுவாக ஆசிய நாடுகள் அனைத்திலும் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மக்கள் மேலும் கடுமையான வெப்பத்தை எதிர்நோக்குகின்றனர்.
தாகம் எடுக்காவிட்டாலும் நிறைய திரவங்கள் பருகுவது, வெளிப்புற நடவடிக்கைகளைக் கவனமாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துவது, இலகுரக, வெளிர் நிற ஆடைகள்அணிவது ஆகியவை உங்களைப் பாதுகாக்கும்.