2021- ஆகச் சூடான ஆண்டுகளில் 5-ஆம் இடத்தைப் பிடித்தது
உலக வரலாற்றில் பதிவான ஆகச் சூடான ஆண்டுகளில் கடந்த ஆண்டு 5-ஆம் இடத்தைப் பிடித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

(படம்: AFP/Patrick T Fallon)
உலக வரலாற்றில் பதிவான ஆகச் சூடான ஆண்டுகளில் கடந்த ஆண்டு 5-ஆம் இடத்தைப் பிடித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்பான C3S அந்தத் தகவலை வெளியிட்டது.
வருடாந்திர சராசரி வெப்பநிலை, தொழிலியல் புரட்சிக்கு முன் பதிவான வெப்பநிலையைவிட 1.1 டிகிரி செல்சியஸிலிருந்து 1.2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டது.
ஐரோப்பா, மத்தியதரைக் கடல், வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் ஆகச் சூடான கோடைக்காலம் உணரப்பட்டது.
கடந்த ஆண்டு கரியமில வாயு, மீத்தேன் (methane) போன்ற வெப்ப வாயுக்களின் வெளியேற்றமும் அதிகரித்ததாக C3S கூறியது.
இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளே உலக அளவில் ஆகச் சூடானவை என்று அது சொன்னது.
அண்மைக்காலமாகப் பல்வேறு நாடுகளில் உலக வெப்பமயமாதலின் தொடர்பில் பல பேரிடர்கள் ஏற்பட்டுள்ளதை C3S சுட்டியது.
-AFP