புறப்படுவதற்குச் சில நொடிகளுக்கு முன் அவசரமாக நிறுத்தப்பட்ட விமானம்

படம்: AFP
ஜப்பான் ஏர்லைன்ஸ் (Japan Airlines) விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து புறப்படுவதற்குச் சில நொடிகளுக்கு முன் அவசரமாக நிறுத்தப்பட்டது.
அது நேற்று முன்தினம் (7 ஏப்ரல்) ஜப்பானின் தோக்கியோ நகரில் உள்ள ஹனெடா (Haneda) விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தது.
சுமார் 40 மீட்டர் அகலம் கொண்ட விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதாக The Yomiuri Shimbun ஊடகம் சொன்னது.
மணிக்கு 90 கிலோமீட்டர் முதல் 130 கிலோமீட்டர் வரை வேகத்தைக் கூட்டிய பிறகே விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதை விமானி அறிந்தார்.
அவர் விமானத்தை நிறுத்துவதற்குள் அது ஓடுபாதையின் ஓரத்தில் இருந்த விளக்கு மீது மோதியதாக The Yomiuri Shimbun கூறியது.
80 பயணிகள் இருந்த விமானத்தில் யாரும் காயமடையவில்லை.
பயணிகள் வேறு விமானத்துக்கு மாற்றிவிடப்பட்டனர்.
சம்பவத்துக்குப் பின் ஓடுபாதை ஒரு மணி நேரம் மூடப்பட்டது.
விமானம் ஓடுபாதையில் செல்லும்போது பாதையில் நடுவே உள்ள கோட்டில் செல்வது வழக்கம்.
ஓடுபாதையின் ஓரத்தில் இருந்த விளக்கு ஓடுபாதையின் நடுவில் இருப்பதாக விமானி தவறாக எண்ணியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொள்கின்றனர்.