'வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் இது': மனம் உருகும் ஜப்பானியக் காற்பந்து அணியின் ரசிகர்கள்
கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பாந்துப் போட்டியில் E பிரிவுக்கான கடைசி ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என ஸ்பெயினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஜப்பானிய ரசிகர்கள் அந்த வெற்றியை இடைவிடாமல் கொண்டாடி வருகின்றனர்.
டோஹாவில் (Doha) ஆட்டத்தை நேரில் பார்த்த யுட்டா கமேய் ( Yuta Kamei) எனும் ரசிகர், ஜப்பான் அணியின் வெற்றிக் களிப்பில் இருந்து இன்னும் மீள முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருப்பதாக CNA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"முற்பாதி ஆட்டத்தில் ஸ்பெயினின் தாக்குதல் ஆட்டம் மிகவும் வலுவாக இருந்தது. ஸ்பெயின் முதல் கோல் அடித்து ஜப்பான் பின்தங்கிய போதிலும் அதன் ரசிகர்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள்",
என மற்றொரு ரசிகரான ஒசாமு ககாயாமா (Osamu Kagayama) கூறினார்.
இதனிடையே, ஜப்பானில் அலுவலகத்தில் மடிக்கணினியில் ஸ்பெயின் - ஜப்பான் மோதிய ஆட்டத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்திய ரியோமா யோஷி (Ryoma Yoshii) எனும் ரசிகர் கத்தாருக்குச் செல்ல அவரது முதலாளியிடம் விடுமுறை கேட்டு வாங்கியிருக்கிறார்.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடைபெறுகிறது. அதனை நேரில் சென்று பார்த்து ரசித்துவிட்டு வருமாறு தமது முதலாளி, சக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தம்மை வாழ்த்தி அனுப்பியதாகவும் அவர் சொன்னார்.
"ஜப்பானிய அணியை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர்கள் விட்டுக்கொடுக்கவே இல்லை"
என்றும் திரு. கமேய் சொன்னார்.
"என்னால் ஆனந்தக் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. சத்தம் போட்டு கத்தியதற்காக எனதருகில் அமர்ந்திருந்த ஸ்பெயின் அணி ரசிகையிடம் நான் மன்னிப்புக் கேட்டேன். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது," எனத் திரு. யோஷி சொன்னார்.
'உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நேரில் சென்று காணவேண்டும் என்பது எனது கனவு. இதுதான் எனது வாழ்நாளில் மிகவும் உணர்வுபூர்வமான தருணம்' என்று திரு. கமேய் கூறினார்.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஜப்பான் புதிய வரலாற்றைத் தொடங்கியிருக்கிறது என்றாலும் அடுத்த ஆட்டத்தில் கவனம் சிதறாமல் விளையாடுவதே முக்கியம் எனத் திரு. யோஷி கூறினார்.