கமலா ஹாரிஸின் தென்கிழக்காசியப் பயணம்-இவ்வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்குமா?
அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
சீனா, தென் சீனக் கடல் விவகாரத்தில் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருவாட்டி ஹாரிஸ் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்திருந்தபோது, தமது கொள்கை உரையில் அதனைத் தெரிவித்திருந்தார்.
அவர், இன்று மாலை சிங்கப்பூரிலிருந்து வியட்நாம் சென்றிருக்கிறார்.
(படம்: Evelyn HOCKSTEIN / POOL / AFP)
திருவாட்டி ஹாரிஸின் தென்கிழக்காசியப் பயணம், உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
அது, இந்த வட்டாரத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சியின்போது, தென்கிழக்காசியா மீதான அமெரிக்காவின் கவனம் வெகுவாகக் குறைந்தது. அதுவே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார் சிங்கப்பூரில் உள்ள அரசியல் கவனிப்பாளர் திரு. கண்ணா கண்ணப்பன்.
இத்தகைய சூழலில், திருவாட்டி ஹாரிஸின் வருகை, உறவை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகவும், தென்கிழக்காசியா மீது அமெரிக்கா கொண்டுள்ள கடப்பாட்டை உறுதி செய்யும் முயற்சியாகவும் தென்படுவதாக அவர் கூறினார்.
சீனாவின் ஆதிக்கம்?
தென்கிழக்காசியாவில் சீனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகக் கூறிய திரு. கண்ணா, இவ்வட்டாரத்தின் ஆகப் பெரிய பொருளியல் பங்காளித்துவ நாடும் சீனாதான் என்பதைச் சுட்டினார்.
இவ்வட்டாரத்தில் சீனாவின் தாக்கம் மேலோங்கி இருக்கின்றது.
அது, அமெரிக்காவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார் அவர்.
தென்கிழக்காசிய வட்டாரத்தில் மீண்டும் தனது கவனத்தைத் திசைதிருப்பப்போவதை, அமெரிக்கத் துணையதிபரின் வருகை காட்டியுள்ளது
என்றார் அவர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள அரசியல் கவனிப்பாளரான ஜான் பெனடிக்ட் அகத்தியனும் (John Benedict Agathiyan), அமெரிக்காவின் பார்வை, மீண்டும் தென்கிழக்காசியா பக்கம் திரும்பியுள்ளதாகக் கூறினார்.
திருவாட்டி ஹாரிஸின் பயணத்துடைய முக்கிய நோக்கம் அமெரிக்காவுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை அதிகரித்து, அந்தப் பகுதியில் அசுர வேகத்திலே வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை ஓரளவு மட்டுப்படுத்துவதே ஆகும்.
என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களும் அதைத்தான் குறிப்பதாக அவர் சொன்னார்.
(படம்: EVELYN HOCKSTEIN / POOL / AFP)
அதனால், தென்கிழக்காசியாவில் அமெரிக்காவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் திரு. அகத்தியன் கூறினார்.
இருப்பினும், அமெரிக்கா, சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படாமல் இருந்தால், அது இரு தரப்புக்கும் நன்மை அளிக்கும் என்று திரு. கண்ணா கருத்துரைத்தார்.
வணிக உறவு மேம்படும். இந்த வட்டாரத்தில் நீடித்த நிலைத்தன்மை இருந்தால், அது உலகப் பொருளியலுக்குப் பெரிதும் உதவும்.
என்றார் அவர்.
தென்கிழக்காசியாவில் சீனாவின் ஆதிக்கம் குறையுமா? அமெரிக்கா வலுவடையுமா? அதனால், இங்குள்ள நாடுகளுக்கு நன்மையா, தீமையா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.