கோலாலம்பூர் விமான நிலையத்தில் தொலைந்தது பயணப்பெட்டி - 5 மணி நேரத்தில் தேடிக்கொடுத்த அதிகாரிகள்
This audio is generated by an AI tool.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் தொலைந்துபோன பயணப்பெட்டியைத் தேட உதவிய அதிகாரிகளின் முயற்சியைக் கண்டு நெகிழ்ந்துபோனார் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர்.
வாங் ஹுவிலிங் (Wang Huiling) எனும் அந்தப் பெண் கடந்த மாதம் (டிசம்பர் 2024) 20ஆம் தேதி ஜப்பானிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டார்.
முதலில் ஜப்பானிலிருந்து மலேசியாவிற்கு விமானத்தில் செல்லவும் அங்கிருந்து சிங்கப்பூருக்குக் காரில் வரவும் வாங் திட்டமிட்டார்.
கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது அவர் கையில் கொண்டுவந்த ஒரு பெட்டியைத் தவறவிட்டார்.
அதைக் கவனிக்காமல் காரிலும் ஏறிவிட்டார்.
வாங் மீண்டும் விமான நிலையத்துக்குச் சென்றபோது அதிகாரிகள் அவரைப் புகார் அளிக்கும்படி கூறினர்.
பெட்டி விரைவாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்குக் குறைந்தது.
ஆனால் அதிகாரிகள் மூலை முடுக்கெல்லாம் தேடினர்...
5 மணி நேரத் தேடலுக்குப் பின் பெட்டி கிடைத்தது.
"அதிகாரிகள் இவ்வளவு சிரத்தை எடுப்பார்கள் என்று நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் கண்காணிப்புக் கேமரா பதிவுகளைப் பார்த்து எல்லாவற்றையும் ஆராய்ந்தனர்," என்று வாங் Sin Chew Dailyஇடம் சொன்னார்.
அதிகாரிகளின் உதவிக்கு அவர் நன்றி கூறினார்.