மலேசியப் பேருந்து விபத்து: மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவி

Fazry Ismail/Pool via Reuters
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் 15 மாணவர்களைப் பலி கொண்ட பேருந்து விபத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவும்படி அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
வேண்டிய உதவிகளைச் செய்யும்படி உயர்க் கல்வி அமைச்சுக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டார்.
பேருந்தில் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் இருந்ததாக ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.
திரு அன்வார் சமூக ஊடகத்தில் இரங்கல் தெரிவித்தார்.
இந்த இக்கட்டான நேரத்தைக் கடந்து செல்ல மனவலிமை கொடுக்கும்படி பிரார்த்திப்பதாக அவர் சொன்னார்.
இந்தக் கோர விபத்து சாலையில் கவனத்தோடு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் பேருந்தும் காரும் மோதிக்கொண்டதாகத் தெரிகிறது.
மொத்தம் 48 பேர் பாதிக்கப்பட்டனர்.
விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய விசாரணை தொடர்கிறது.