கோலாலம்பூரில் குழியில் விழுந்த பெண் - உதவ முன்வரும் சிங்கப்பூர் நிறுவனம்
CNA/Fadza Ishak
This audio is generated by an AI tool.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பாதாளக் குழிக்குள் விழுந்த பெண்ணைத் தேட சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று உதவ முன்வந்துள்ளது.
வடிகால் திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற Jetters Incz Pte Ltd எனும் நிறுவனம் தேடல் பணிகளில் சேர விரும்புவதாய்த் தெரிவித்திருப்பதாக Malay Mail செய்தி நிறுவனம் சொன்னது.
இந்தியச் சுற்றுப்பயணியான திருமதி விஜயலெட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை (23 ஆகஸ்ட்) ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் உள்ள நடைபாதையில் சென்றுகொண்டிருந்தபோது அவரது காலுக்கு அடியில் திடீர் என்று பள்ளம் ஏற்பட்டது. அவர் உள்ளே விழுந்தார்.
அவரைத் தேட குழிக்கு அருகிலுள்ள சாக்கடைத் துளைகளில் Flushing எனப்படும் அணுகுமுறை தற்போது பயன்படுத்தப்படுகிறது.
துளைகளிலிருந்து இடிபாடுகள் அல்லது தடங்கலை ஏற்படுத்தக்கூடிய பொருள்களை அகற்ற புதிய வழி உதவும் என்று நம்பப்படுகிறது.
Jetters Incz Pte Ltd நிறுவனம், அதனிடம் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் இருப்பதாகவும் சிக்கலான கால்வாய் செயல்முறைகளைக் கையாளும் ஆற்றல் இருப்பதாகவும் சொன்னது.
அதைப் பற்றி 8 World விசாரித்தபோது கோலாலம்பூரில் அதற்குள்ள தொடர்புகளை வைத்துத் தேடல் பணிகளில் உதவ எண்ணுவதாக நிறுவனம் கூறியது.
திருவாட்டி விஜயலெட்சுமி குழிக்குள் விழுந்து 4 நாளாகிவிட்டது. இதுவரை அவருடைய காலணிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.