மலை ஏறும்போது விழுந்த 100 கிலோ ஆடவர் - 20 மணிநேரம் போராடிய மீட்புக் குழு
Unsplash/Fabrizio Conti
100 கிலோ எடைகொண்ட மலேசிய ஆடவர்...
நண்பர்களோடு மலை ஏறச் சென்றார்....கால் தவறி விழுந்தார்.
அவரை மீட்க 20 மணிநேரம் போராடியது தீயணைப்புப் படை.
சம்பவம் சிலாங்கூர் மாநிலத்தின் ஹூலு லங்காட் (Hulu Langat) பகுதியில் கடந்த மாதம் 31ஆம் தேதி மதியம் 1 மணியளவில் நடந்தது.
கீழே விழுந்ததில் 32 வயதான அந்த ஆடவருக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதனால் அவர் மேற்கொண்டு நடக்க முடியாமல் தவித்தார்.
தகவல் கிடைத்து அங்கே சென்ற மீட்புக்குழுவினர், சுமார் 8 கிலோமீட்டர் தூரம் அவரைத் தேடி அலைந்தனர்.
இரவு சுமார் 9.30 மணிக்கு அடிபட்ட ஆடவரை ஒரு நீர்வீழ்ச்சியின் அருகில் கண்டுபிடித்தனர்.
மலைப்பாதை கரடுமுரடாக இருந்ததாலும் அவரது உடல் பருமனாக இருந்ததாலும் அவரைச் சுமந்து வருவது தீயணைப்பு வீரர்களுக்குப் பெரும் சவாலாக மாறியது.
அவரைச் சுமார் 10 தீயணைப்பு வீரர்கள் ஒரு தூக்குப்படுக்கையில் (Stretcher) சுமந்தபடி மலையிலிருந்து இறங்கப் பாடுபட்டனர்.
அந்தப் பணி விடிய விடிய நடந்தது.
இறுதியாக நேற்று காலை 9 மணிக்கு ஆடவரை மலையிலிருந்து பத்திரமாகக் கீழே கொண்டு வர முடிந்தது.
சிகிச்சைக்காக ஆடவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.