தூங்கும்போது துப்பாக்கிச் சூட்டுக் காயம் பட்டுப் பரிதாபமாக மாண்ட ஆடவர்
பிரட்டனைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம்பட்டு மாண்டார்.
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் நேற்று (21 ஜனவரி) அதிகாலை சம்பவம் நேர்ந்தது.
தமது காதலியைச் சந்திக்க, சென்ற வாரம் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார் 31 வயதான மாத்தியூ வில்சன் (Dr Matthew Wilson).
அதிகாலை சுமார் 2 மணி அளவில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்ட குடியிருப்பாளர்கள், தொலைபேசி மூலம் அவசரச் சேவைகளை அழைத்தனர்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாத்தியூ, தலையில் பட்ட காயம் மோசமாகி மாண்டார்.
அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது படுக்கையறையின் சுவர் வழியாக தோட்டா பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்களால் சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் யாரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
காவல்துறை, விசாரணைக்கு மக்களின் உதவியை நாடியுள்ளது.