ஈரானின் தாக்குதல்களைக் கண்டிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்
Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS
அமெரிக்கா, பஹ்ரேன், ஜோர்தான், குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவை ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்துக் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஈரான் மேற்கொள்ளும் ஏவுகணைத் தாக்குதல்களும் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களும் நாடுகளின் அரசுரிமையை மீறுவதாக அவை எச்சரித்தன.
ஈரானின் நடவடிக்கை மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என்று அந்த நாடுகள் கூறின.
ஈரான் வட்டார நாடுகளுடன் போரிடவில்லை என்று கூறிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) அமெரிக்காவுக்கு நெருக்குதல் தரும்படி அவற்றை வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தை நடந்துகொண்டிந்தபோதே தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது கடந்த சனிக்கிழமை (28 பிப்ரவரி) தாக்குதல் நடத்தத் தொடங்கின.
அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்திருக்கும் அண்டை நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
பஹ்ரேன், ஜோர்தான், குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவை அதில் அடங்கும்.
ஆக அண்மையில் ரியாத்திலுள்ள (Riyadh) அமெரிக்கத் தூதரகம் மீது வானூர்தித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.