மினசோட்டா மாநிலத்திலிருந்து 700 குடிநுழைவு அதிகாரிகள் வெளியேற்றம்
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) நிர்வாகம் மினசோட்டா மாநிலத்தில் பணியாற்றும் 700 குடிநுழைவு அதிகாரிகளை மீட்டுக்கொள்ளவிருக்கிறது.
அங்கு சுமார் 2,000 அதிகாரிகள் எஞ்சியிருப்பர். சட்டவிரோதக் குடியேறிகளைக் கைதுசெய்து சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்காக ஆயுதமேந்திய குடிநுழைவு அதிகாரிகள் மினியாபோலிஸ் நகருக்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
சென்ற மாதம் (ஜனவரி) அங்கு குடிநுழைவு அதிகாரிகள் பொதுமக்கள் இருவரைச் சுட்டுக் கொன்றதை அடுத்துக் குடிநுழைவுச் சோதனைகளை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
மக்களின் கோபத்தைத் தணிக்க மினசோட்டா மாநிலத்திற்கு எல்லைக் கொள்கைப் பிரிவுத் தலைவர் டாம் ஹோமன் (Tom Homan) அனுப்பப்பட்டார்.
700 குடிநுழைவு அதிகாரிகள் மீட்கப்பட்டாலும் சட்டவிரோதக் குடியேறிகளை அகற்றும் நடவடிக்கை தொடரும் என்று திரு ஹோமன் கூறினார்.
மினசோட்டா காவல்துறை அதிகாரிகள் அதிகமானோர் சட்டவிரோதக் குடியேறிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதால் குடிநுழைவு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக அவர் சொன்னார்.