உலகம் exclusive
ஜொகூர் பாரு லிட்டில் இந்தியாவில் தோரணத்தின் விலை உயர்வுக்கு மழை காரணமா?
படம்: லொவிஷீனா
This audio is generated by an AI tool.
இம்முறையும் தோரணங்களின் விற்பனை சூடுபிடித்திருக்கிறது என்றாலும் மக்களிடையே அதன் விலை குறித்துப் பலவேறு கருத்துகள் எழுகின்றன.
“நான் இம்முறை தோரணம் வாங்கவில்லை. 9 தோரணத்தை 15 ரிங்கிட்டுக்கு விற்கிறார்கள். எனக்கு இது நியாயமான விலையாகப் படவில்லை. அதனால் இம்முறை வாங்க வேண்டாம் எனத் தீர்மானித்து விட்டேன்” என்று ஜொகூரைச் சேர்ந்த நளினி செய்தியிடம் கூறினார்.
விலையேற்றத்திற்கான காரணம் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஜொகூர் பாரு லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள பல கடைகள் அதே விலையில்தான் தோரணங்களை விற்பதாக அவர் சொன்னார்.
வருடத்திற்கு ஒருமுறை வரும் பொங்கலுக்கு விலை பார்ப்பதில்லை என்கிறார் திருமதி கணேஷ்.
சிங்கப்பூரைச் சேர்ந்த முத்துகுமார் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் ஜொகூருக்கு வந்து பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்கிறார்.
சுமார் 13 ஆண்டுகளாகப் பொங்கலுக்கு வேண்டிய பொருள்களை ஜொகூரிலேயே வாங்கிச் செல்வதாக அவர் சொன்னார்.
மழை அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.
இதற்கிடையில் ஜொகூரில் பூவியாபாரம் செய்து வரும் ரஜினி கண்ணன் தம்முடைய கடையில் தோரணம் ஒன்று ஒரு ரிங்கிட்டிற்கு விற்கப்படுவதாகத் தெரிவித்தார்.
"சில நேரம் நம் கண்ணுக்குத் தெரியும் தென்னை ஓலையை வைத்து விலையை நியாயப்படுத்த முயலுவோம். ஆனால் அதன் பின்னால் உள்ள வேலைப்பழு, செலவழிக்கப்படும் நேரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார் அவர்.