கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் லெபனான்
எதிர்வரும் நவம்பர் 20ஆம் தேதி 2022 உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்தை ஏற்று நடத்த கத்தார் தயாராகி வருகிறது.
இந்நிலையில் கத்தாரில் தனது நாட்டினருக்கு வேலை வாய்ப்பை எளிதாக்க லெபனான்(Lebanon) இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லெபனானில் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டது.
கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடர்பான வேலைகள் தவிர இதர நீண்ட கால வேலை வாய்ப்புகளையும் அந்த இணையத்தளம் ஏற்படுத்தித் தரும் என லெபனான் மனிதவள அமைச்சு கூறியது.
கடந்த மாதம் கய்ரோவில் (Cairo) நடைபெற்ற அரபுத் தொழிலாளர் மாநாட்டின் போது, கத்தார் பிரதிநிதியுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் பலனாக இணையத்தளம் தொடங்கப்பட்டது.
லெபனான் அரசாங்கமும், ஐக்கிய நாட்டு நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில், லெபனானில் அதிகாரப்பூர்வ வேலையின்மை விகிதம் 3 மடங்கு அதிகரித்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் 29.6 விழுக்காட்டை எட்டியது தெரிய வந்துள்ளது.
பல ஆண்டுகளாக நீடித்த ஊழல், நிதி முறைகேடுகள் காரணமாக அந்நாட்டுப் பொருளாதாரம் 2019ஆம் ஆண்டு சரிந்தது.
இதனால் அதன் நாணய மதிப்பில் 95 விழுக்காடு குறைந்து, வறுமை விகிதம் உயர்ந்தது.
-AFP