ஒலிவாங்கியில் பதிவான இழிவான கருத்து - சிக்கலில் தென் கொரிய அதிபர்
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அமெரிக்காவைப் பற்றி அவர் கூறிய இழிவான கருத்து, ஒலிவாங்கியில் பதிவாகிவிட்டது.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபைக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலகளாவிய அறநிதி ஒன்றுக்கு 6 பில்லியன் டாலர் கொடுப்பதாக அறிவித்தார்.
அவருடன் மேடையில் படம் எடுத்துக்கொண்ட திரு யூன், கீழே இறங்கியதும் தமது உதவியாளர் ஒருவரிடம்,
"அமெரிக்க மக்களவை இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், பைடனுக்கு அவமானம் இல்லையா?" என்பதைத் தகாத வார்த்தைகளோடு சேர்த்துக் கூறியிருக்கிறார்.
அது சக்திவாய்ந்த ஒரு ஒலிவாங்கியால் காணொளியில் பதிவாகிவிட்டது.
காணொளி தென் கொரியாவில் வேகமாகப் பரவி வருகிறது.
அது தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
திரு யூனின் இழிசொற்கள் தென் கொரியாவின் மதிப்புக்கு ஏற்பட்ட களங்கம் என்று இணையவாசிகள் கொதிக்கின்றனர்.
தென் கொரியாவின் முக்கிய நட்பு நாடு அமெரிக்கா. வடகொரியாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள அமெரிக்கா 27,000 துருப்பினரை நிரந்தரமாகத் தென்கொரியாவில் நிறுத்திவைத்துள்ளது.
ஏற்கனவே மக்களிடையே செல்வாக்கை இழந்துவரும் திரு யூனுக்கு இந்தச் சம்பவம் பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
-AFP