"சுவீடன் நேட்டோவில் தம்முடைய ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம்" - துருக்கியே அதிபர்
துருக்கியே அதிபர் தய்யிப் எர்துவான் நேட்டோவில் சேரும் சுவீடனின் விருப்பத்துக்குத் தமது ஆதரவு இருக்காது என்று கூறியிருக்கிறார்.
சுவீடன் தலைநகரில் இடம்பெற்ற இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இருநாட்டுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹாமில் உள்ள துருக்கியே தூதரகத்துக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்துத் திரு. எர்துவான் முதல்முறை கருத்துரைத்தார்.
சுவீடன் வலசாரிக் கட்சியின் தலைவர் திருக்குர்ஆனை எரித்த சம்பவம் உலகெங்கும் கண்டனத்துக்கு இலக்கானது.
அதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பதற்கு சுவீடன் அரசாங்கம் அனுமதி தந்திருக்கக் கூடாது என்று துருக்கியே அதிபர் குறிப்பிட்டார்.
அதன் பிறகு நேட்டோவில் சுவீடன் சேர்வதற்குத் துருக்கியே ஆதரவு தரும் என்று எதிர்பார்க்க முடியாது என்றார் அவர்.
நேட்டோவில் சுவீடனும் ஃபின்லந்தும் சேர்வதற்கு துருக்கியே, ஹங்கேரி ஆகிய நாடுகள் மட்டுமே தடையாக உள்ளன.
நேட்டோவில் உள்ள அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே புதிய நாடுகள் அதில் சேர முடியும்.