ஹோர்முஸ் நீரிணையில் தாய்லந்துச் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் பயணம் செய்த தாய்லந்துச் சரக்குக் கப்பல் தாக்கப்பட்டதாகத் தாய்லந்துக் கடற்படை கூறியிருக்கிறது. கப்பலிலிருந்து 20 சிப்பந்திகள் மீட்கப்பட்டுள்ளதாக அது சொன்னது.
தாய்லந்து அரசக் கடற்படை பகிர்ந்துள்ள புகைப்படங்களில், தாய்லந்தில் பதிவு செய்யப்பட்ட மயூரி நாரி (Mayuree Naree) கப்பலிலிருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறுவதைப் பார்க்க முடிவதாக AFP செய்தி ஊடகம் சொன்னது.
கடலில் உயிர்க்காப்புப் படகுகள் மிதப்பதும் தெரிந்ததாக அது சொன்னது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உள்ள கலீஃபா (Khalifa) துறைமுகத்திலிருந்து புறப்பட்ட அந்தக் கப்பல் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணம் செய்தபோது தாக்கப்பட்டதாகக் கடற்படை தெரிவித்தது.
178 மீட்டர் நீளமும் 30,000 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பல் இந்தியாவின் கண்ட்லாவுக்குச் (Kandla) சென்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
பேங்காக்கில் செயல்படும் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கப்பல் அது.
தாக்குதல் பற்றி விசாரிக்கப்படுகிறது.
கப்பலிலிருந்த 20 சிப்பந்திகளை ஓமான் கடற்படை மீட்டுள்ளது.
எஞ்சிய 3 சிப்பந்திகளை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஈரான் போரினால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய எரிசக்திப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளது.