இந்தோனேசியாவில் ரயில் விபத்து - உடல்களை மீட்ட வட்டாரவாசிகள்
Yasuyoshi Chiba / AFP
This audio is generated by an AI tool.
இந்தோனேசியாவின் பெக்காசி (Bekasi) வட்டாரவாசிகளுக்கு வழக்கம் போல் இரவு சென்று கொண்டிருந்தது.
ஆனால் திடீரென்று டயர் வெடிப்பது போன்ற பெரும் சத்தம் கேட்டு அவர்கள் விழித்துக் கொண்டனர்.
சத்தம் வந்த பெக்காசி திமோர் (Bekasi Timur) நிலையத்தை நோக்கி ஓடினர்.
அங்கு நேர்ந்த விபத்தில் 2 ரயில்களும் ஒரு டாக்சியும் சம்பந்தப்பட்டன.
குறிப்பாக ஒரு ரயில் வண்டி நசுங்கிக் கிடந்தது.
அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் வருவதற்கு ஒரு மணி நேரமாகும்.
அதிகாரிகள் வரும் வரை காத்திருக்காமல் வட்டாரவாசிகள் செயலில் இறங்கினர்.
விபத்தில் மாண்டோரைச் சிதைவுகளிலிருந்து தூக்கத் தொடங்கினர்.
"சிதைவுகளுக்கு இடையே சிக்கி இருப்போரை எண்ணி வருந்தினோம். நானும் என் நண்பர்களும், மற்ற வட்டாரவாசிகளும் உடல்களைத் தூக்க உதவினோம்," என்றார் ரோஹிம்.
நேற்றிரவு ஏற்பட்ட விபத்தில் 14 பேர் மாண்டனர்.
84 பேர் காயமுற்றனர்.
பெண்களுக்கான சிறப்பு ரயில் வண்டி குறிப்பாக அதிகம் சேதமானது.
பெண்கள் உலோகப் பகுதிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டனர்.
அவர்களைக் காப்பாற்ற அதிகாரிகள் முதலில் உலோகப் பகுதிகளை வெட்ட வேண்டிருந்தது.
மீட்புப் பணி நிறைவடைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.