'குரங்கம்மைக் கிருமி மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குப் பரவினால், அபாயகரமாக உருமாறக்கூடும்'
குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர், விலங்குகளுடன் தொடர்பில் இருப்பதைக் குறைத்துக்கொள்ளுமாறு அமெரிக்க அதிகாரிகள் கூறிய பரிந்துரைக்கு உலகச் சுகாதார நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து, நாய் ஒன்றுக்குக் குரங்கம்மை பரவியதைத் தொடர்ந்து நிறுவனம் அவ்வாறு தெரிவித்துள்ளது.
குரங்கம்மைக் கிருமி மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குப் பரவினால், அபாயகரமாக உருமாறக்கூடுமென சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் வீடுகளில் அல்லாத மற்ற இடங்களில் சுதந்திரமாகத் திரியும் விலங்குகளைக் குறிப்பிடுவதாக நிறுவனம் வலியுறுத்தியது.
உலக அளவில் 35,000க்கும் மேற்பட்டோருக்குக் குரங்கம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரத்தைக் காட்டிலும் அது 20 விழுக்காடு அதிகம்.
அவர்களில் பெரும்பாலோர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வசிப்பவர்கள்.
பாதிக்கப்பட்ட சமூகங்களில் குரங்கம்மைத் தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.