பல நாடுகளில் Omicron பரவல் உச்சத்தை எட்டவில்லை... தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கவும்: உலகச் சுகாதார நிறுவனம்
உலக நாடுகள் பலவற்றில் ஓமக்ரான் வகைக் கிருமிப்பரவல் இன்னமும் உச்சத்தை எட்டவில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனால் நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அது வலியுறுத்தியது.
பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் குறைவாக உள்ளதால் நோயால் எளிதில் கடுமையாகப் பாதிப்படையக்கூடிய மக்கள் அதிகமானோர் இருக்கலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் சுட்டியது.
சில நாடுகளில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால், ஓமக்ரான் கிருமி கடுமையாகப் பாதிக்காது என்ற எண்ணம் பரவலாக உள்ளது.
நோயைத் தடுப்பது முடியாத ஒன்று என்றாலும் அதைத் தடுப்பதற்குத் தேவையில்லை என்ற கருத்தும் பலரிடையே தோன்றுவதாக உலகச் சுகாதார நிறுவனம் சுட்டியது.
அது முற்றிலும் உண்மையில்லை என நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்தார்.
உலக நாடுகள் அவற்றின் மக்களை முடிந்த எல்லா வழிகளிலும் பாதுகாக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.