பெண்களுக்கான திடல்தடப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கெடுப்பதில் தடை
ஆணாக இருந்து பெண்ணாகத் தங்களை மாற்றிக்கொண்ட திருநங்கைகள், அனைத்துலகத் திடல்தடப் போட்டிகளின் பெண்கள் பிரிவில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகத் திடல்தடச் சம்மேளனத் தலைவர் லார்ட் கோயே (Lord Coe), அந்தத் தடையை அறிவித்தார்.
ஆணாகப் பருவமடைந்து பின்னர் பெண்ணாக மாறியவர்கள், வரும் 31ஆம் தேதியிலிருந்து பெண்களுக்கான உலகத் தரவரிசைப் போட்டிகளில் பங்கேற்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
திருநங்கைகள், திருநம்பிகளுக்கான போட்டித் தகுதி வழிகாட்டிகள் குறித்து மேலும் ஆராய, பணிக்குழு ஒன்று நிறுவப்படும்.
அண்மைத் தடை, நிரந்தரமானது அல்ல என்று லார்ட் கோயே தெரிவித்தார்.
பெண்கள் பிரிவைப் பாதுகாக்கும் நோக்கில் அண்மை முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
தற்போது, திடல்தடப் பிரிவுப் போட்டிகளில் அனைத்துலக அளவில் எந்தவொரு திருநங்கையோ திருநம்பியோ போட்டியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண் திடல்தடப் போட்டியாளர்கள் பங்கேற்கும் போட்டி, நியாயமானதாக இருப்பதை உறுதி செய்வது கட்டாயமென்றும் லார்ட் கோயே தெரிவித்தார்.
-REUTERS