"ரஷ்யாவில் புட்டின் அதிபராக இருக்கும்வரை பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை" - உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கீவ் உடனடியாக நேட்டோ ராணுவக் கூட்டணியில் சேர்வதை விரைவுபடுத்தும்படிக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேட்டோ கூட்டணியின் உறுப்புநாடாகச் சேர்வதற்கான தகுதி உக்ரேனிடம் இருப்பதை அந்நாடு நிரூபித்திருப்பதாக அவர் சொன்னார். அதனால், உடனடியாக உக்ரேனைக் கூட்டணியில் சேர்க்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
அதன் தொடர்பில் இடம்பெறவேண்டிய சந்திப்புகளை இனியும் ஒத்திவைக்க வேண்டாம் என்றும் அவர் சொன்னார்.
திரு ஸெலன்ஸ்கி முன்னதாக உக்ரேனியப் பாதுகாப்பு, தற்காப்பு மன்றத்தைச் சந்தித்துப் பேசினார்.
உக்ரேனின் வட்டாரங்களை ரஷ்யா இணைத்துக் கொள்வது பற்றியும் உக்ரேனின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு பற்றியும் சந்திப்பில் பேசப்பட்டது.
சந்திப்பில் ரஷ்யாவுக்கு எதிரான அணுவாயுத எதிர்ப்புத் தற்காப்பு உத்திகளைப் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புட்டின் விடுத்த அழைப்புக்கும் திரு. ஸெலன்ஸ்கி பதில் சொன்னார்.
ரஷ்யாவில் விளாடிமிர் புட்டின் அதிபராக இருக்கும்வரை பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என்று உக்ரேனிய அதிபர் கூறினார்.