Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"என்னைச் சொந்தப் பிள்ளையாக வளர்த்த பெற்றோருக்கு இந்த விருது சமர்ப்பணம்"

வாசிப்புநேரம் -
குடும்பம் என்பது ரத்த பந்தத்தைத் தாண்டி அன்பால் ஏற்படும் சொந்தம்..அந்த உறவு தனித்துவமானது என்பதைக் கதிஜாவும் அவரது வளர்ப்புப்பெற்றோரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கதிஜா ஒரு மாதக் கைக்குழந்தையாக இருந்த சமயத்திலிருந்து வளர்ப்புப்பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

இப்போது அவருக்கு வயது 14.

இவ்வாண்டு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட வளர்ப்புப்பிள்ளைகள், இளையர்களுக்கான விருது நிகழ்ச்சியில் விளையாட்டு, கலைப் பிரிவில் கதிஜா விருதுபெற்றார்.

கடும் உழைப்புக்குக் கிடைத்த பலன்

கதிஜா தேக்குவாண்டோ தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்று, தேசிய அளவில் தமது உயர்நிலைப் பள்ளியைப் பிரதிநிதித்துள்ளார்.

"தேக்குவாண்டோவுக்காக விருது கிடைத்ததில் பெருமிதம் கொள்கிறேன். என் பெற்றோரைப் பெருமைப்படுத்தியதில் மகிழ்கிறேன். இந்த விருது கடும் உழைப்புக்குக் கிடைத்த பலன். என்னைச் சொந்த பிள்ளையாக வளர்த்த பெற்றோருக்கு இது சமர்ப்பணம்," என்று நெகிழ்ந்தார் கதிஜா.

பெற்றோரின் அர்ப்பணிப்பு, பயிற்றுவிப்பாளரின் ஊக்கம்

"எனது பெற்றோர் சிரமம் பார்க்காமல் நான் பங்கெடுக்கும் அனைத்து தேக்குவாண்டோ போட்டிகளுக்கும் வந்து ஊக்கமளிப்பர். எதையும் சாதிக்கலாம் என்ற உற்சாகம் கிடைத்தது. ஆரம்பக் கட்டத்தில் பிறர் முன் தேக்குவாண்டோ செய்யத் தயங்கினேன். பதற்றமாக இருந்தது. எனக்கிருந்த தயக்கத்தையும் பதற்றத்தையும் கைவிட என் பயிற்றுவிப்பாளர் உறுதுணையாக இருந்தார்.
இப்போது தேக்குவாண்டோ செய்யும்போது மன உளைச்சல் குறைகிறது; மனத்திற்கு நிறைவாக இருக்கிறது, " என்று அழகாய்ச் சொன்னார் கதிஜா.

"குடும்பமின்றி நான் இல்லை"

வளர்ப்புப் பெற்றோர் தம்மை எவ்விதத்திலும் வேறுபடுத்திப் பார்த்ததில்லை என்று உணர்வுகள் மேலோங்கச் சொன்னார் கதிஜா.

"அவர்கள் இன்றி எதுவும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை,"

"எங்கள் கண்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை. எல்லாப் பிள்ளைகளும் ஒன்று தான்"

எந்தப் பாரபட்சமும் இன்றி கதிஜாவை சொந்தப் பிள்ளையைப் போல் வளர்க்கும் அவரது பெற்றோர் அவரது திறமை குறித்துப் பெருமிதம் கொள்கின்றனர்.

ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்திறமை உண்டு. அதனைக் கண்டறிவது முக்கியம் என்றனர் அவர்கள்.

"கதிஜாவுக்கு Dyslexia எனப்படும் வாசிப்புத் திறன் குறைபாடு உள்ளது. படிப்பில் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் கண்களுக்கு அவள் திறமைசாலி தான். அவளுக்கு மனோதிடம் அதிகம். ஒவ்வொரு கட்டத்திலும் அவளுக்குப் பிடித்ததைச் செய்ய ஊக்கமளித்தோம்," என்றார் கதிஜாவின் தந்தை. 

இளையர்களுக்கு கதிஜா சொல்ல விரும்புவது...

"கைத்தொலைபேசியில் காலத்தை வீணாக்காதீர்கள். வீட்டிலேயே அடைந்து கிடக்காதீர்கள். இளமைக் காலம் பொன்னானது. நேரத்தை நல்வழியில் செலவிடுங்கள்," என்று உற்சாகத்துடன் கூறினார் கதிஜா.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்