Skip to main content
"நல்லது ஆனால் சிக்கல்கள் இருக்கலாம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"நல்லது ஆனால் சிக்கல்கள் இருக்கலாம்" - கைத்தொலைபேசி தடை குறித்து மாணவர்கள்

வாசிப்புநேரம் -

உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கைத்தொலைபேசிகள், அறிவார்ந்த கைக்கடிகாரங்கள் போன்றவற்றைப் பள்ளியில் பயன்படுத்த அனுமதி கிடையாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அது அடுத்த ஆண்டு (2026) ஜனவரி முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.

அறிவிப்பு நல்ல மாற்றத்தைக் கொண்டுவருமா? மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

envato elements
"மின்னிலக்கச் சாதனங்களில் மூழ்குவதைத் தவிர்க்கலாம்"

"புதிய அறிவிப்பு கடுமையாகத் தெரியலாம். ஆனால் மின்னிலக்கச் சாதனங்களில் மூழ்கியிருப்பது இளையர்களிடையே பிரச்சினையாகி வருகிறது. அதனால் புதிய தடை தேவையான ஒன்று" என்றார் அனன்யா.

தற்போதைய அல்ஃபா (Alpha) தலைமுறையினர் நீண்ட நேரம் கைத்தொலைபேசிகளிலும் இதர சாதனங்களிலும் நேரத்தைச் செலவழிப்பதாகக் கூறினார் குமார் சரண்யா.

"பல பள்ளிகளில் கைத்தொலைபேசியைத் தடை செய்தாலும் மாணவர்கள் பாட நேரத்தில் அறிவார்ந்த கைக்கடிகாரங்களைப் பயன்படுத்துகின்றனர். புதிய அறிவிப்பு நல்ல மாற்றத்தைக் கொண்டுவரலாம்" என்றார் அவர்.

"மாணவர்களுக்குப் புரியும் வகையில் செயல்படுத்த வேண்டும்"

உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சுதந்திரமாக இருக்க நினைப்பர் என்று சுபிட்ஷா சொக்கலிங்கம் குறிப்பிட்டார்.

"தடை எதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்துச் சொல்லும்போது மாணவர்கள் அதை எதிர்க்காமல் பின்பற்ற வாய்ப்புள்ளது" என அவர் சொன்னார்.

புதிய விதியைப் படிப்படியாகச் செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றார் சுபிட்ஷா.
envato elements
"சுயக்கட்டுப்பாடு இல்லாமல் போகலாம்"

இந்தத் தடை ஏற்புடையது என்றாலும் மாணவர்கள் தாங்களாகவே சுயக்கட்டுப்பாட்டைப் பழக்கப்படுத்திக் கொள்ளத் தவறலாம் என்றார் சரண்யா.

"பள்ளி நேரம் முடிந்ததும் அவர்கள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடும்; அதுவும் சுயக்கட்டுப்பாடின்றி நீண்ட நேரம் பயன்படுத்தலாம்" என்றார் அவர்.

"இணைப்பாட நடவடிக்கைகளில் தொடர்பு முக்கியம்"

சில இணைப்பாட நடவடிக்கைகளில் தொடர்பு முக்கியமாக இருப்பதைக் குமார் தனுஷ்கா சுட்டினார்.

அப்போது கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று சொன்னால் சிரமங்கள் ஏற்படலாமென அவர் சொன்னார்.

"நான் இந்திய நடனத்தில் இருக்கிறேன். அப்போது வெவ்வேறு நடனப் பயிற்சிகள் வெவ்வேறு இடங்களில் நடக்கும்.
அதனால் ஒருவருக்கு ஒருவர் தகவல் தெரிவிக்க கைத்தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டும்" என்றார் தனுஷ்கா.

பொதுவாகத் தடையை வரவேற்றாலும் அதில் உள்ள சில சிக்கல்களை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.

மாணவர்களின் நலன் கருதி மாணவர்களிடையே ஆரோக்கியமான மின்னிலக்கப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்க அந்த மாற்றத்தைக் கொண்டுவருவதாகக் கல்வி அமைச்சு சொன்னது.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்