பள்ளியில் மற்றவர்களை வம்புக்கு இழுக்கும் மாணவர்கள் தற்காலிகமாக நீக்கப்படலாம்
CNA/Mak Jia Kee
This audio is generated by an AI tool.
பள்ளியில் மற்றவர்களை வம்புக்கு இழுக்கும் மாணவர்களுக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்படும்.
அவர்கள் பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படலாம்; தடுத்து வைக்கப்படலாம்; பிரம்படியும் கொடுக்கப்படலாம்.
நடத்தையின் கடுமையைப் பொறுத்து மாணவர்களின் தண்டனை வேறுபடும்.
மற்றவர்களை மீண்டும் மீண்டும் வம்புக்கு இழுக்கும் மாணவர்கள் அதிகபட்சம் 14 நாள்களுக்குத் தற்காலிகமாக நீக்கப்படலாம் அல்லது வகுப்புக்குப் பின் பள்ளியில் தடுத்துவைக்கப்படலாம்.
நடத்தைக்கான மதிப்பீட்டில் குறைவான தரநிலையையும் பெறக்கூடும்.
ஆண் மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 பிரம்படிகள் கொடுக்கப்படலாம்.
பள்ளியில் துன்புறுத்தல் சம்பவங்களைக் கையாளக் கல்வியமைச்சு செயல்படுத்தவிருக்கும் புதிய நடவடிக்கைகள் இவை.
புதிய நடைமுறையில் மாணவர்களின் சீர்திருத்தம் மீதும் கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சு கூறியது.
மாணவர்கள் மனநல ஆலோசனைக்கு அனுப்பப்படலாம் என்று அது சொன்னது.
இதற்கு முன்னர் பள்ளியைப் பொறுத்து அணுகுமுறை வேறுபட்டது.
அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே அணுகுமுறை இருப்பதைப் புதிய நடைமுறை உறுதிசெய்யும்.